
வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள், வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் ;
விசாரணைகளில் கொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும், மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டதுடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.